சென்னை: தமிழ்நாடு அரசு குறித்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறு கருத்து பரப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை வழக்கைச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யும்படி நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவுறுத்தி முன்னாள் டிஜிபிக்கு அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது எனக்கூறி தமிழ்நாடு அரசு பற்றியும், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முன்னாள் டிஜிபியான நட்ராஜ் சார்பில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் முறையிடப்பட்டது.
இதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி, "இந்த வழக்கு திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த கோரிக்கையை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தான் மனுத் தாக்கல் செய்ய முடியும்" என அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, அந்த வழக்கின் எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பிறகு, எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அவரது அமர்வில், விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சொத்துக் குவிப்பு வழக்கு... முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் குடும்பத்துடன் கோர்டில் ஆஜர்..!