மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,’தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவர அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.
கடந்த ஆண்டு இந்தியாவில் கரோனா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் மக்கள் பொருளாதாரரீதியில் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டம் கூட்டமாக சென்று மக்கள் மத்தியில் பரப்புரை செய்யும்போது கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், கரோனா பரவலை தடுக்க முடியவில்லை. இந்நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை செய்ய அனுமதிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிட வேண்டும்.
மாறாக, அரசியல் கட்சிகள், தொலைக்காட்சி, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புரை செய்யலாம்’என அந்த மனுவில் யோசனை தெரிவித்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பேனர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 2ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து, சமீபகாலமாக கரோனா அதிகரித்து வருவது இரண்டாவது அலையாக இருக்கலாம் என கவலை தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதில் தலையிட முடியாது எனக் கூறி பரப்புரைக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர்.
அதேசமயம் பரப்புரைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தனிமனித விலைகளையும் பின்பற்றுவதையும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். இது தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.