கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாட்டில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மதுக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்துவருவது காவல்துறையினருக்குத் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று (மே.26) மாலை நியூ ஆவடி சாலை கே.ஜி ரோடு சந்திப்பில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருச்சக்கர வாகனத்தில் சொமேட்டோ நிறுவன ஊழியரைப் போன்று ஆடை அணிந்து வந்த நபரைப் பிடித்து, அவரது அடையாள அட்டை குறித்து கேட்டனர்.
அப்போது அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவர் வைத்திருந்த உணவு பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் 10 பீர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, பீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, அந்நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் (32) என்பது தெரியவந்தது. அவர், ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் நபர்களுக்கு வீடு தேடி மதுபானத்தை டோர் டெலிவரி செய்து வந்ததும் தெரியவந்தது. உணவு கொடுப்பதுபோல் மது பானத்தை எடுத்துச் சென்றால் காவல்துறையினர் சோதனை செய்ய மாட்டார்கள் என, எண்ணியதாகத் தெரிவித்தார். இதனையடுத்து டி.பி சத்திரம் காவல்துறையினர் பிரசன்னா மீது வழக்குப்பதிவு செய்ததோடு, நிபந்தனை பிணையில் விடுவித்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு: வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்கு உதவுங்கள்!