சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த நிலையில், ஜி 20 உறுப்பு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு கல்லூரி மாணவர்கள், ஐஐடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என 900 பேர் கலந்து கொள்ளும் வகையில் கல்விசார் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் இன்று (ஜன.31) முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
இதன் முதல் நாளான இன்று "கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்வியில் ஒவ்வொரு நாடுகள் பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், நடைமுறைகள் குறித்தும், திறன் மேம்பாடு குறித்தும் பேச உள்ளனர்.
இந்த கருத்தரங்கத்திற்கு மத்திய அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் கே.சஞ்சய் மூர்த்தி தலைமை தாங்குகிறார். அனைவருக்கும் எளிதில் அணுகவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான கல்வியை அளிப்பதற்கு ஜி 20 உறுப்பு நாடுகளால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசினார்.
அப்போது பேசிய அவர், “ஆஸ்திரேலியா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் டிஜிட்டல் கல்வியில் சிறந்து விளங்குகிறது. பிரான்சில் ஆங்கிலத்தில் பாடம் நடத்தினாலும், பிரான்ஸ் மொழியில் மொழி பெயர்க்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்காக அந்த நாடு பெரும் தொகையை செலவழிக்கிறது.
சீனா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் விர்ச்சுவல் டிஜிட்டல் வகுப்பறைகளை அதிக அளவில் உருவாக்கி வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி மூலம் அந்த நாடுகளில் அனைவருக்கும் கல்வி தங்கு தடை இன்றி வழங்கப்படுகிறது. தென் ஆப்பிரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளும் தங்களது கல்வி கட்டமைப்புகளை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகின்றன.
கரோனா பெருந்தொற்று கல்விக்கு பெரும் சவாலாக இருந்தது. அந்த நேரத்தில் அனைவருக்கும் கல்வி வழங்கும் கருவியாக தொழில்நுட்பம் டிஜிட்டல் மட்டுமே விளங்கியது. இங்கிலாந்து நாட்டில் ஆராய்ச்சி படிப்புகளை மேம்படுத்துவதற்கு பெருமளவில் நிதி ஒதுக்கி வருகிறது. சீனா 20,000க்கும் அதிகமான உயர் கல்வி பாடத்திட்டங்களை கொண்டதாக உள்ளது.
உயர்கல்வி படிக்கும் தளமாக சீனா மாறி வருகிறது. நெதர்லாந்து அதிக அளவில் மென்பொருள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பிரான்ஸ் தொழில் முனைவோர் தொடர்பான கருத்தரங்கு பயிற்சி வகுப்புகளை அதிக அளவில் நடத்தி வருகிறது. இந்தியா பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கி வருகிறது.
தொழில்நுட்பக் கல்வி மையமாக இந்தியா மாறி வருகிறது. பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்கள் சுயநிதி கல்லூரிகளாக உள்ளன. அதனால் அனைவருக்கும் கல்வி சென்று சேர்வதில் சிரமம் உள்ளது. ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் ஸ்மார்ட் எஜுகேஷன் திட்டங்களை ஊக்குவித்து வருகின்றன.