சென்னை: ஆட்டோகிராப், ஆடுகளம் உள்பட பல திரைப்படங்களுக்கு பாடலை எழுதி பிரபலமானவர் சினேகன். இவர் ‘சினேகம்’ என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி பண வசூலில் ஈடுபடுவதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சினேகன், “2015ஆம் ஆண்டு முதல் ‘சினேகம் பவுண்டேஷன்’ மூலமாக பல உதவிகளை செய்து வருகிறோம். சமீபமாக இணையதளங்களில் தனது பவுண்டேஷன் பெயரை பயன்படுத்தி சிலர் பண வசூலில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையினரிடமிருந்து தகவல் வந்தது.
இது தொடர்பாக விசாரித்தபோது சமூக வலைதளப்பக்கத்தில் ‘சினேகம் பவுண்டேஷன்’ என்ற பெயரை பயன்படுத்தி பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி என்பவர் பண வசூலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால், எனது வழக்கறிஞர் மூலமாக எனது பெயரில் போலி தொண்டு நிறுவனம் நடத்திய நபரின் விலாசத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அப்போது விலாசம் தவறு என அந்த நோட்டீஸ் திரும்பி வந்துவிட்டது. செல்போனில் தொடர்பு கொண்ட போது நேரில் சமாதானம் பேசி கொள்ளலாம் என அழைத்ததால் சட்டரீதியாக புகார் அளிக்க வந்துள்ளோம்” என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், முறைப்படி மத்திய அரசு அங்கீகாரம் பெற்று தனது சொந்த செலவில் சினேகம் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், தனது பெயரை பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஜெயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். நடிகை ஜெயலட்சுமியும் புகைப்படத்தை பயன்படுத்தி யாரேனும் மோசடி செய்கின்றனரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர் கைது!