சென்னையைச் சேர்ந்த ஆர். தனசேகரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “மதுவால் ஒருவரது குடும்பமே சீரழிந்து விடுகிறது. இந்தியாவில் 33 லட்சம் பேர் மது குடித்ததால் இறந்துள்ளனர். இவர்களில்,18 லட்சம் பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மக்களின் உடல் நலனையும், வாழ்க்கை தரத்தையும் உயர்த்தும் கடமை அரசுக்கு உள்ளது. மதுவுக்கு எதிராக, பலத்த குரல்கள் எழும்பி உள்ளன. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதனால், அப்படி இனி மது கடைகளை திறக்கக் அனுமதிக்ககூடாது என உத்தரவிட வேண்டும்” கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத்கோத்தாரி, புஷ்பசத்யநாரயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எம்.எல்.ரவி, ஊரடங்கினால் மக்கள் குடிப்பழக்கத்தை மறந்துள்ளனர்.
எனவே பூரண மதுவிலக்கை அமல்படுத்த, இதுவே சரியான தருணம் என வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய்நாரயண், அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்ற தலையிட முடியாது என்று தெரிவித்தார். எங்கெல்லாம் திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தாலும், தமிழத்தில் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?