சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பள்ளி கல்வித்துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட துறை சார்ந்த அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, "கல்வி தொலைக்காட்சியின் சிஇஓ -ஆக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் பூபதியின் பணியாணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் அவரின் பின்புலம் குறித்து ஆராய கூடிய பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்காலிக ஆசிரியர்களுக்கு 7,500 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அதனை உயர்த்த வேண்டும் என்கிற எண்ணம் அரசுக்கு இருந்தாலும் தற்போதைய அரசின் நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறைக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்க வேண்டிய தகவல்களை கொடுத்து விட்டோம். இனி விரைந்து அவர்கள் நடவடிக்கை எடுத்தால் மட்டும் தான் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு விதி உள்ளது. அந்த அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த ஆண்டில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும். திமுக தேர்தல் அறிக்கையின் படி, ஆசிரியர்களின் TET சான்றிதழ்களை ஆயுள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு