CMDASHBOARD: சென்னையில் அனைத்துத் துறைச் செயலர்களுடனான ஆய்வுக் கூட்டத்தில், அனைத்துத் துறைகளின் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளும்விதமாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் 'முதலமைச்சர் தகவல் பலகை' ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் முக்கியத் தகவல்களை நாள்தோறும் பார்வையிட்டு, அரசு அளித்துள்ள வாக்குறுதிகள், வெளியிட்டுள்ள அறிவிப்புகள், அரசின் முக்கியச் செயல்திட்டங்கள் தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்த அனைத்துத் தகவல்களும் தெரிந்துகொள்ளலாம்.
அதன்படி நிகழ் நேர தகவல், முறையான கண்காணிப்பு, அரசின் செயல்திறன் அதிகரிப்பு, தாமதங்களைக் குறைத்தல், உடனடி முடிவுகள் எடுத்தல் ஆகியவற்றின் தேவையை உணர்ந்து தகவல் பலகையை உருவாக்கிட தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆலோசகர் டபிள்யு.சி. டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
முதலமைச்சர் தகவல் பலகை
1. மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கிய நீர்த் தேக்கங்களின் கொள்ளளவு, இதுநாள் வரையிலான நீர் இருப்பின் நிலை.
2. மழைப்பொழிவு முறை, 25-க்கும் மேற்பட்ட உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றின் விலை நிலவரம், திடீர் விலை உயர்வின் சாத்தியக் கூறுகளைக் கண்காணித்துத் தீர்வுகாண உதவும் விலைத் தளம் (Price Mesh), வேலைவாய்ப்பு களநிலவரங்களைக் கொண்டு தற்போதைய பொருளாதார நிலையைக் கண்டறிதல்.
3. நுகர்ப்பொருள் வாணிபத் தகவல்.
4. முதலமைச்சர் உதவி மையம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் வாயிலாகப் பெறப்பட்ட மனுக்களின் தற்போதைய நிலை, தீர்வுகள் குறித்த முழுத் தகவல்கள்.
5. முதலமைச்சரால் கண்காணிக்கப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் குறித்த விரிவான தகவல்கள்.
6. மாநிலத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் - அவற்றில் அதிக கவனம் தேவைப்படும் மாவட்டங்கள் குறித்த காவல் துறையின் தினசரி அறிக்கைகள்.
7. நகர்ப்புற, கிராமப்புற ஏழை மக்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களின் நிலை.
8. குடிநீர் வழங்கல் திட்டங்கள் குறிப்பாக அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் குறித்த தகவல்கள். இவை அனைத்தும் தகவல் பலகையின் முதல் தொகுப்பில் அடங்குகின்றன.
இதனைத் தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலின் நேற்று (டிசம்பர் 23) திறந்துவைத்தார்.
இதையும் படிங்க: TNPSC: தமிழ்மொழி கட்டாயம் பாடத்திட்டம்: டிஎன்பிஎஸ்சி வெளியீடு