சென்னை தியாகராய நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது," நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி கொண்டு இருக்கிறது.
கரோனா பரவல் முதல் அலை மத்திய, மாநில எடுத்த நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டது. கரோனா தடுப்பூசி, இதுவரை 13.55 லட்சம் கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும், 45 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி ஆகஸ்ட் இறுதிக்குள் செலுத்தவற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ரயில், ராணுவ விமானம் மூலமாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் உற்பத்தியை அந்தந்த மாவட்டங்களில் தயாரிக்கவும் அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் ஆனால், தடுப்பூசி குறித்தும், ஆக்ஸிஜன் குறித்தும் எதிர்கட்சிகள் தவறான கருத்துக்களையும், உண்மைக்கு புறம்பான வதந்திகளையும் அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பி வருகின்றனர். மக்கள் உயிரோடு விளையாடும் எதிர்கட்சிகள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளைத் தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துக் கொள்கிறேன்.
தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். இதனை அரசியல் ஆக்க வேண்டாம். கரோனா தடுப்பூசி போடுவதற்கு கடந்த வாரம் கூவி கூவி அழைத்தோம் அப்போது யாரும் வரவில்லை. தற்போது, விழிப்புணர்வு காரணமாக மக்கள் தடுப்பூசி செலுத்த வருகின்றனர். தடுப்பூசி பற்றாக்குறை இல்லை, போதுமான அளவு தடுப்பூசி இருக்கிறது.
இரு தடுப்பூசி நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் மூன்றாவதாக ஸ்புட்னிக் தடுப்பூசிக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பாஜக சார்பில் கரோனா சேவை மையம் 24 நேரமும் செயல்படும்.
செங்கல்பட்டில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைந்துள்ளது. இதன் கட்டமைப்பு பணிகள் முடிந்து செயல்பட தயார் நிலையில் உள்ளது. இந்த மையத்தை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்து, கரோனா தடுப்பூசி தயாரிப்புக்கான பணிகளை மத்திய அரசு விரைவில் செய்யும்" என்றார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு உதவுங்கள்' - ஜோ பைடனுக்கு அழுத்தமளிக்கும் அமெரிக்கர்கள்!