சென்னை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் நூறு ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், “சென்னையில் கரோனா உயிரிழப்பு குறைந்து வருகிறது. குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக ஐந்தாயிரம் மூன்று சக்கர வண்டிகள், இரண்டாயிரம் நான்கு சக்கர வண்டிகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் மளிகைப் பொருள்களை விற்பதற்கு மூன்றாயிரத்து 200 நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் கோயில் அர்ச்சகர்களின் வருமானம் முழுவதுமாக தடைபட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு அர்ச்சகர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணமாகத் தரப்படுகிறது” என்றார்.
அதனைத் தொடர்ந்து சென்னை ஆணையர் ககன் தீப் சிங் பேடி செய்தியாளர்களிடம் பேசுகையில், “காய்கறிகளின் விலைகள் தினமும் மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. சில இடங்களில் விலை அதிகரிக்கும் அல்லது குறையும். அதிக விலைக்கு காய்கறி விற்பனை செய்வோரின் நடமாடும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்றார்.
இதையும் படிங்க : 'தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு' - வைகோ