தமிழ்நாட்டில் மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது முடக்கும் அமல்படுத்தப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதோடு, மருத்துவ பணியாளர்கள் தேவையான அளவு நியமனம் செய்யப்பட்டனர். இருப்பினும், போதுமான அளவில் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டினை மருத்துவத் துறையினர் தொடர்ந்து முன்வைத்துவருகின்றனர்.
சமீபத்தில் மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் மட்டும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் என 7 ஆயிரத்து 900 மேற்பட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரோனா தொற்று தீவிரமாக இருந்தக் காலத்தில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டு, தேவைப்படக்கூடிய இடங்களுக்கு பணியிட மாற்றமும் செய்யப்பட்டனர்.
தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை இறங்குமுகமாகவே பணியிட மாற்றம் பெற்றவர்கள் பழைய இடங்களுக்கு மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். பணியிட மாற்றம், புதிய நியமனம் என மருத்துவத் துறையில் மாற்றங்கள் நிகழும் நிலையில், மருத்துவர்கள் பற்றாக்குறை என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபுவிடம் கேட்டோம்.
அவர்,”தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் போதுமான அளவிற்கு மருத்துவர்கள் உள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று தொடங்கிய மார்ச் மாதம் 7 ஆயிரத்து 767 மருத்துவர்கள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து முதுகலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள், தற்காலிக அடிப்படையில் மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் என 1500 பேர் நியமிக்கப்பட்டனர். தற்போது 9 ஆயிரத்து 191 மருத்துவர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் பணிபுரிந்து வருகின்றனர்.
பயிற்சி முடித்த மருத்துவர்களுக்கும் நீட்டிப்பு வழங்கப்பட்டு பணிபுரிந்து வருவதால் போதுமான அளவு மருத்துவர்கள் உள்ளனர். செவிலியர்கள், ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், டயாலிசிஸ் தொழில்நுட்ப பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே மருத்துவமனைகளில் போதுமான அளவு மருத்துவர்கள் செவிலியர்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் பணியில் உள்ளனர்.
முதுகலை பட்ட மேற்படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிய வேண்டும் என்பது ஒப்பந்தம். அதன் பின்னர் அவர்கள் விருப்பப்பட்டால் தொடர்ந்து அரசு பணியில் பணிபுரியலாம்.
கரோனா தொற்று அதிகமாக இருந்த பகுதிகளுக்கு மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவ்வாறு பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்ததால் வைரஸ் தொற்று கட்டுப்படுத்த முடிந்தது. அரசு எடுத்த விழிப்புணர்வு நடவடிக்கை தொற்று குறைய முக்கியமான காரணம். தவிர, மருத்துவமனைகளில் படுக்கை வசதி அதிகரிப்பு, தேவையான அளவு மருந்துகள் கொள்முதல் செய்தல், ஆக்ஸிஜன் வசதியை அதிகரித்தது போன்ற காரணங்களால் கரோனா வேகமாக குறைந்து வருகிறது.