சென்னை ராயப்பேட்டை தனியார் மண்டபத்தில், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் நலிந்த தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவியை வழங்கினார். அண்ணா தொழிற்சங்கப் பேரவை உறுப்பினர்களில் நலிவடைந்த 314 தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 3 கோடியே 14 லட்சம் ரூபாய் குடும்ப நல நிதியாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "திமுகவினருக்கு வசூல் செய்து தான் பழக்கமே தவிர நலிந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது கிடையாது. நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட 310 பேரில் 136 பேர் பெண்கள். வைத்திலிங்கத்தை பொறுத்தவரை என்னையும், எடப்பாடி பழனிசாமியினையும், காமராஜையும் வசைபாடுவதே வழக்கம்.
வைத்திலிங்கம் திமுகவின் பி-டீம் (B Team) ஆக மாறி செயல்பட்டு வருகிறார். வைத்திலிங்கம் போன்ற ஆட்கள் இருந்ததால் தான் எங்களுக்கு தோல்வியே. தஞ்சாவூரில் மூப்பனாருக்கு பிறகு 2ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வைத்திலிங்கத்திற்குத் தான் உள்ளது. ஆட்சியில் இருந்து சம்பாதித்து விட்டு இன்று திமுகவிற்கு விலை போய், கட்சி குறித்து விமர்சனம் செய்வதை எந்த தொண்டனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வைத்திலிங்கம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அனைவரும் பொய்க்கால் குதிரைகள். இவர்கள் அனைவரும் ஸ்டாலினை வைத்து இன்று பொம்மலாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
லாரியில் அடிபட்டு இறந்தால் 2 லட்சம் ரூபாய், பில்டிங் விழுந்து இறந்தால் 2 லட்சம் ரூபாய், சிலவிதமான மரணங்களின் போது ஒரு லட்சம் ரூபாய். ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசினுடைய வரிப்பணத்தில் இருந்து நிவாரணம் அளிப்பது எதையோ மூடி மறைக்கின்ற செயல் இது. உலகத்தில் எங்கேயாவது கள்ளச்சாராய வியாபாரிக்கு ஐம்பதாயிரம் கொடுத்திருப்பார்களா?. கள்ளச்சாராய வியாபாரிக்கு ஐம்பதாயிரம் நிவாரணம் அளிக்கப்படுகிறது என்றால் இது எந்த அளவுக்கு முட்டாள்தனம் வாய்ந்த ஆட்சியாக உள்ளது.
அறிவில்லாத அரசு தான் இன்று தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய வியாபாரம் திமுக ஆட்சியில் கொழுத்துப் போய் இருக்கிறது. மக்களுடைய வரிப்பணத்தில் அவர்களுக்கு ரோடு போட்டு தரவும் விளக்கு வசதி ஏற்படுத்தித் தரவும் முடியாமல் கடலில் பேனா வைப்பதற்கு என்ன அவசியம்.
திமுகவின் அறக்கட்டளை மூலமாக வரக்கூடிய பணத்தை வைத்து அறிவாலயத்தில் பேனா சிலையை 600 அடிக்குக் கூட நிறுவிக்கொள்ளட்டும். அதில் எங்களுக்கு எந்தவிதமான கருத்தும் இல்லை. மீனவர்களது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பேனா வைப்பது எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். நிச்சயமாக இதில் நீதியை வெல்லுவோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோர்... மெத்தனத்தில் போலீசார்!