சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 2008ம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனேனா மாசிலாமணி, வம்சம், சில்லு கருப்பட்டி, கடைசியாக லத்தி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார் இவர் மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்டவர்.
இவர் தற்பொழுது ”அயிரா ப்ரொடக்ஷன்ஸ்” என்கிற தயாரிப்பு நிறுவனத்தில் டொமின் டிசில்வா இயக்கத்தில் ”ரெஜினா” என்கிற திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகை சுனைனாவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை எனவும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கடத்தப்பட்டாரா? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் 6 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த சுனைனா ஐந்து நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே - கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியயை தனது தோழிகளுடன் கண்டுகளித்த புகைப்படம் மற்றும் வீடியோவை ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு அவரது சமூக வலைதளத்தில் எந்தவித பதிவும் போடவில்லை. இந்த நிலையில் நடிகை சுனைனா காணவில்லை என்கிற வீடியோ வேகமாக பரவியதை தொடர்ந்து சென்னை காவல்துறையினர் அவர் கடைசியாக எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக எக்மோர் நுங்கம்பாக்கம், கோயம்பேடு, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் இருந்துள்ளார் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் வளசரவாக்கத்தில் அவர் முன்னர் தங்கி இருந்த வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதே போல அவர் நடித்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிலும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவரது தொடர்பு எண் மற்றும் தற்போது எங்கு தங்கியுள்ளார் போன்ற விவரங்களை இரண்டு நாட்களாக சேகரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாராக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அந்த வீடியோ நடிகை சுனைனா தற்பொழுது நடித்து முடித்து வெளிவர உள்ள ரெஜினா என்கிற திரைப்படத்திற்கான பட ப்ரமோஷன் என்பது தெரியவந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு படத்தை விளம்பரப் படுத்துவதற்கு தயாரிப்பு நிறுவனம் பல்வேறு யுத்திகளை கையாள்வது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்று ஆனால் ஒரு நடிகை காணவில்லை என வீடியோ தயாரித்து அதை உண்மை போல் உலாவ விட்டு பலரும் அந்த வீடியோ உண்மை என நம்பி ரெஸ்க்யூ சுனைனா என்கிற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆனதைத் தொடர்ந்து போலீசார் அது குறித்து விசாரணை நடத்தும் அளவிற்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சனை, குற்றத் தடுப்பு நடவடிக்கை, முக்கிய பிரமுகர் பந்தோபஸ்த் என ஏற்கனவே போலீசார் கடும் பணி சூழலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு பட ப்ரொமோஷன் வீடியோவால் இரண்டு நாட்களாக போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்தது, காவலர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்து - முஸ்லீம் சர்ச்சையை ஏற்படுத்துமா காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்? - இயக்குநர் முத்தையா கூறியது என்ன!