சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக, பொருளாதார, கல்வி நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கு, அவர்களுக்கென தனியாக ஒரு வாரியம், ஆதிதிராவிடர் நல அமைச்சரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, பழங்குடியினர் நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்த்தல், பதிவுகளை சரிபார்த்தல், அடையாள அட்டை வழங்குதல், நலத்திட்ட உதவிகள் அளித்தல் போன்றவற்றை செயல்படுத்துவதற்கு ஆணை வெளியிடப்பட்டது.
அதன்படி, பழங்குடியினர் நல வாரியம் 2007ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு வாரிய அட்டை பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு விபத்துக் காப்பீடு, கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித் தொகை, மூக்குக் கண்ணாடிகள் வாங்கிட உதவித் தொகை, ஈமச்சடங்கிற்கான உதவித் தொகை, மரணமடைந்தவரின் குடும்பத்திற்கான உதவி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஈமச்சடங்கு உதவித் தொகை உயர்வு
அதன்படி சீர் மரபினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம் ஆகியவற்றில் பதிவு செய்த உறுப்பினர்கள் இயற்கை மரணமடைந்தால் வழங்கப்படும் நிதியுதவி 20 ஆயிரம் ரூபாயாகவும், ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதியுதவி ஐந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுவது போலவே, பழங்குடியினர் நலத்துறையிலுள்ள பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர் மரணமடைந்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் நிதி உதவியான 15ஆயிரம் ரூபாயிலிருந்து 20ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.
அதேபோல், ஈமச்சடங்கிற்கு வழங்கப்படும் நிதி உதவியை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்குமாறு பழங்குடியினர் நல இயக்குநர் அரசினை கேட்டுக் கொண்டுள்ளார். பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் முன்னதாக ஆய்வு செய்தது.
அதனடிப்படையில், பழங்குடியினர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இயற்கை மரண உதவித் தொகையினை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் , ஈமச்சடங்கு உதவித் தொகையினை இரண்டாயிரம் ரூபாயிலிருந்து, ஐந்தாயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.
இதையும் படிங்க: பழங்குடிகளிடமிருந்து பொது சமூகம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - ராம் நாத் கோவிந்த்