சென்னை: IIT Madras launches Unmute campaign: சென்னை ஐஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சாஸ்தரா தொழில்நுட்பத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இயக்கம் மூலம் பெண்கள் மாதவிடாயின்போது சுத்தத்தைப் பேணுதல், அதைப் பற்றிய விழிப்புணர்வு, ஆன்லைனில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆண்-பெண் சமத்துவம் உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு மேற்கெள்ளப்படும்.
இந்த ஆண்டில் சாஸ்த்ரா 2022 என்னும் திட்டத்தின் கீழ், 'அன்மியூட்' இயக்கம் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 23 மில்லியன் சிறுமிகள் மாதவிடாயின்போது பள்ளி செல்வதில்லை.
15 முதல் 24 வயது வரையிலான பெண்களில் 62 விழுக்காட்டினர் இன்னமும் மாதவிடாயின்போது துணிகளையே பயன்படுத்துகின்றனர் என தெரியவந்துள்ளது.
இந்த இயக்கம் மூலம் சென்னை ஐஐடி மாணவர்கள் பெண்கள், பள்ளி மாணவர்களுக்கு என்ஜிஓ-க்களைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். மாதவிடாயின்போது சுத்தமாக இருத்தல், சுத்தமாக இல்லாவிடில் வரும் நோய்கள் பற்றி கலந்துரையாடுவர். பெண்களுக்கு நாப்பிகின் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
பெண்களுக்குப் பாலியல் தொல்லை ஏற்படும்போது எளிமையான நுட்பங்களைக் கொண்டு, தங்களைத் தற்காத்து கொள்வது, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, அபாயகரமான நிலைமைகளை அடையாளம் கண்டு கொள்வது உள்ளிட்டவைகள் குறித்தும் கற்பிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: நீட் விவகாரம்: குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் டி.ஆர். பாலு