சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (40). இவர் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்துவந்தார்.
இவரது மனைவி சித்ரா செல்வி (38) ஸ்ரீபெரும்பத்தூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிவருகிறார். காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஜஸ்வந்த் ரத்தினம் (20) என்ற மகனும், நேத்ரா (12) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த மூன்று வருட காலமாக சிவப்பிரகாஷ், சித்ரா செல்வி, குழந்தைகள் ஒரே வீட்டில் வசித்து வந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்துவந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்ரா செல்வியும், நேத்ராவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தனர்.
இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சிவப்பிரகாசம் நேற்றிரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தந்தை தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜஸ்வந்த், அவரை மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அங்கு சிவப்பிரகாசத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க:மரத்தில் பிணமாகத் தொங்கிய வட இந்திய பெண்!