தமிழ்நாட்டில், கரோனா தடுப்பூசிகள் போடப்பட்ட பின், பயோமெடிக்கல் கழிவுகளை அழிக்கும் முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன என்று மக்கள் நல்வாழ்வு துறையினர் தெரிவிக்கின்றனர். கரோனா தொற்று தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகியவை கடந்த 16ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் போடப்பட்டு வருகின்றன.
கோவின் ஆப் மூலம் பதிவு செய்த மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தற்போது போடப்பட்டு வருகின்றன. கடந்த 19ஆம் தேதி வரை 25 ஆயிரத்து 908 பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு பாட்டில் 10 பேருக்கும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு பாட்டில் 20 பேருக்கும் போடமுடியும்.
கையாள்வது எப்படி?
ஆனால், தடுப்பூசியை வழங்குவதற்குரிய சிரஞ்சுகள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். தடுப்பூசி மையத்தில் ஒருவருக்கு தடுப்பூசி போட்ட பின்னர், அந்த ஊசியினை கட்டர் வைத்து பாதுகாப்பாக செவிலியர்கள் உடைக்கின்றனர். இதைத் தொடர்ந்து, பயோமெடிக்கல் வேஸ்ட் உபயோகிக்கும் கூடையில் சிரஞ்சுவை செலுத்துகின்றனர். ஊசிகள் ஒரு குறிப்பிட்ட அளவில் நிரம்பியவுடன் அதற்கென தனியாக ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்கின்றனர்.
செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதா?
அதேபோல் சிரஞ்சுவையும் பாதுகாப்பாக கையாளுவதற்கு பயிற்சி பெற்ற செவிலியர்கள் மூலம் பேக்கிங் செய்கின்றனர். பின்னர் அதனை பயோமெடிக்கல் வேஸ்ட் எடுத்துச்செல்லும் நிறுவனத்திடம் ஒப்படைக்கின்றனர். இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
பாதிப்பு இல்லையா?
இது குறித்து ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறுகையில், "தடுப்பூசிகளை போடும் போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் சிரஞ்சை பயன்படுத்துவோம். தடுப்பூசி போட்ட பின்னர் அந்த ஊசியை தனியாக கட்டர் மூலம் உடைத்தப் பின்னர், சிரஞ்சுவை பயோமெடிக்கல் வேஸ்ட் சேமிக்கும் கூடையில் செலுத்துவோம்.
இதனை மேற்கொள்வதற்கு செவிலியர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் சிரஞ்சுவில் 5 மில்லி தடுப்பு மருந்து எடுக்க முடியும். அந்த சிரஞ்சுவில் மருந்து எடுத்து செலுத்திய பின்னர் மீண்டும் அதனை இழுத்தால் வராது. எனவே இதனை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்றார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் மையத்தின் மருத்துவர் கூறுகையில், "கரோனா தடுப்பூசி வழிமுறைகளை பின்பற்றி போடப்படுகிறது. தடுப்பூசியினை போட்ட பின்னர் எவ்வாறு கையாள வேண்டும் என செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: கரோனோ தடுப்பூசி போடுவதிலும் தமிழகம் முன்னோடி!