சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. அதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 147 மி.மீ., மழைப்பதிவானது.
ஆனால், இந்த முறை அக்டோபர் 31ஆம் தேதி முதல் 2ஆம் தேதி வரை 205 மி.மீ., அளவு பதிவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணிநேரமும் இயங்கும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை, அவசர எண், 700க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் என பல நடவடிக்கையினை சென்னை மாநகராட்சி எடுத்தது.
இருப்பினும், கடந்த ஆண்டை விட அதிக மழை பதிவானதால் வழக்கம் போல் வடசென்னை இந்த முறையும் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக பட்டாளம் மார்க்கெட் பகுதி, பெரம்பூர் பி.பி. ரோடு, வில்லிவாக்கம் ஜெகநாதன் நகர், வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதை, எம்.எம்.கார்டன் ஸ்டீபன் சாலை, முல்லை நகர், பெரம்பூர் ஜமாலியா பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்பவர்களும் அவதிக்குள்ளாகினர்.
இது ஒருபுறம் இருந்தாலும் பெரிய அளவில் பாதிக்கப்படும் ராயபுரம் கல்மண்டபம், தியாகராய நகர் ஜி.என். செட்டி சாலை, வேளச்சேரி ராம்நகர், உள்ளிட்டப் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவு தேங்கவில்லை என்றும்; பொதுமக்கள் மாநகராட்சியை சமூக வலைதளத்தில் பாராட்டினர். சில இடங்களில் மழைநீர் தேங்கியதற்கும், பல இடங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன.
![வடிகால் பணிகளால் தேங்காத மழைநீர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-03-corporation-rain-script-image-7209208_15112022193941_1511f_1668521381_375.jpeg)
வடிகால்களால் தேங்காத மழைநீர்: முதலில் கடந்த ஆண்டு மழைநீர் தேங்கியது பகுதிகளைத் தேர்வு செய்து சிங்காரச்சென்னை திட்டம் மூலம், மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த இடங்களில் மழைநீர் தேங்காமல் இருந்தது. ஆனால், மழைநீர் வடிகால் பணி முடியாத இடங்களில் மழைநீர் தேங்கியது.
சென்னை தியாகராய நகர்ப்பகுதியில் உள்ள மாம்பழம் கால்வாய் தூர்வாரப்பட்டு அகலப்படுத்திய காரணத்தினால் மழைநீர் தேங்காமல் சீராக சென்றது. ஆனால், கே.கே. நகரில் உள்ள எம்ஜிஆர் கால்வாய் மற்றும் வடசென்னையில் உள்ள ஓட்டேரி நல்லா கால்வாய், காந்தி கால்வாய், தனசேகரன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் சரியாக அகலப்படுத்தாத காரணத்தினால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கியது. தண்ணீர் நின்ற பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகளை வைத்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.
கடந்த 2ஆம் தேதிக்குப் பிறகு அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகளை தண்ணீர் தேங்கும் இடங்களில் நிறுத்தி வைத்ததால் அதற்குப் பிறகு பெரிய அளவில் தண்ணீர் தேங்கவில்லை. ஆனால், கடந்த சில தினங்களாகப் பெய்த மழையால் புறநகர் பகுதிகளான முகலிவாக்கம் மற்றும் மாங்காடு பகுதிகளில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் செல்ல, பாதை இல்லாமல் குடி இருக்கும் பகுதிகளில் தேங்கியது. கடந்த 2 நாட்களாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார். பம்புகளை வைத்து மாநகராட்சி தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.