கரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் உணவகங்கள் செயல்படாமல் உள்ளன. இதனால் உணவக உரிமையாளர்கள் வாடகை கொடுக்க முடியாமலும், பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும் தவித்துவருகின்றனர்.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கின்போது மூடப்பட்ட உணவகங்கள், தளர்வுகளுடன் சில விதிமுறைகளைப் பின்பற்றி உணவகங்கள் செயல்படலாம் என அரசு அறிவித்திருந்தது. குறிப்பாக, உணவகங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கிருமிநாசினி வைத்திருப்பது, பார்சலுக்கு மட்டும் அனுமதி, வாடிக்கையாளர்கள் கடையில் அமர்ந்து உண்ணக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் காரணமாகப் பெரும்பாலான உணவகங்கள் இன்னும் திறக்கப்படாமலே உள்ளன. கடந்த நான்கு மாதங்களாகச் செயல்படாமல் இருக்கும் உணவகங்களுக்கு வழக்கம்போல் மின்கட்டணம், வாடகை செலுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைச் செலுத்துவதற்குப் போதுமான வருமானமும் இல்லாமல் உள்ளதால், உணவகங்களுக்கு வாடகை வாங்க தடைவிதிக்க வேண்டும்; மின் கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என உணவக உரிமையளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உணவகங்களின் உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசிய தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரவி, "ஹோட்டல்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்கின்றனர் என்பது அரசுக்கு நன்கு தெரியும். நான்கு மாதங்களாகச் செயல்படாமல் உள்ளோம். இதனைக் கருத்தில்கொண்டு உணவகங்களுக்கான வாடகை வசூலிக்க தடைவிதிக்க வேண்டும். மேலும், மின் கட்டணத்தையும் ரத்துசெய்ய அரசு முன் வர வேண்டும்" என்கிறார்.
ஊரடங்கு காலத்தில் வாடகை வசூலிக்கக் கூடாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், உணவகங்களுக்கும் அது பொருந்துமா என கேள்வி எழும் நிலையில், உணவகங்கள் சங்கத்தின் சார்பில் இக்கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், உணவகங்கள் செயல்படும் கட்டட உரிமையாளர்களுக்கு ஊரடங்கு காலத்தில் சொத்து வரி வசூலிக்காமல் அரசு சலுகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வியாபாரமின்றி மூடப்படும் ஹோட்டல்கள் - அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை