நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பையை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கழிவுநீர் அனைத்தையும் சுத்திகரித்த பிறகே நீர்நிலைகளில் கலக்க விடவேண்டும். ஏரி, குளங்களை ஆழப்படுத்தி அதன் சேமிப்பு கொள்ளளவை பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும்.தண்ணீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளது.
‘கேளு சென்னை கேளு’ என்ற தலைப்பில் ஜூன் 30 ஞாயிற்றுகிழமை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.காவல்துறை ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்து உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அனைத்து போராட்டங்களுக்கும் அனுமதி வழங்காமல் அதன் முக்கியத்துவம் அறிந்து அனுமதி வழங்கலாம். தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னையான தண்ணீர் பற்றாக்குறை குறித்த விழிப்புணர்வு போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாது.அதனால், தண்ணீர் பற்றாக்குறை குறித்து அறப்போர் இயக்கம் மேற்கொள்ளும் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் அதே தினத்தில், வேறு கட்சிக்கு போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், காலை 9 மணி முதல் மதியம் 1.00 வரை அறப்போர் இயக்கம் உண்ணாவிரத போராட்டத்தை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தலாம்.பின்னர், தமிழ்நாடு இளைஞர் கட்சியின் உண்ணாவிரதத்தை 2 மணியில் இருந்து மாலை 5 மணிவரை நடத்தலாம் என உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடிந்து வைத்தார்.