சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய வளாகங்களிலுள்ள 1,500 மான்களை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு வனத்துறை நடவடிக்கை எடுத்தது. மான்களைப் பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யவும் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் வனத்துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ”நாய்கள் கடிப்பதாலும், வாகனங்கள் மோதுவதாலும் வேட்டையாடப்படுவதாலும் மான்கள் பலியாவதை தடுக்க இயற்கையான சூழல் கொண்ட காடுகளுக்கும், தேசிய பூங்காக்களுக்கும் மான்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 497 புள்ளி மான்கள் இறந்துள்ளன. மாற்று இடத்திற்கு செல்லும்போது துன்புறுத்தல் இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுகிறது. வேறு இடத்துக்கு மாற்றும் முன் கிண்டியில் 15 நாள் பரிசோதனையில் வைக்கப்பட்டு அதன் பின்னரே மான்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்ற விதிகளின்படியே இடமாற்றம் செய்யப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன வளாகத்திலுள்ள மான்களை இடமாற்றம் செய்வதில் தவறில்லை எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். விலங்குகளை இடமாற்றம் செய்வது தொடர்பாக உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க வனத்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், அது தொடர்பாக ஜனவரி 21இல் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சரவணா ஸ்டோர்ஸ் அதிபரை மிரட்டி பணம் பெற்ற வழக்கறிஞர் முன்பிணை தள்ளுபடி!