சென்னை: பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் மழை வெள்ளம் காரணமாக தண்ணீர் சூழும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்குவதற்காக அரசு நிவாரண முகாமை பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏற்படுத்தியுள்ளது. அங்கு பாதிப்புக்குள்ளான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
துரைப்பாக்கம் காவல் துறையினர் வழக்கமான ரோந்து பணியின்போது அந்த நிவாரண முகாமை பார்வையிட்டு அங்கிருந்த மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதையடுத்து முகாமில் உள்ள மோனிகா என்ற ஒரு வயது பெண் குழந்தைக்கு பிறந்தநாள் என்ற தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, துரைப்பாக்கம் காவல் துறையினர் ஒன்றிணைந்து அந்த குழந்தைக்கு புத்தாடை, சாக்லேட், பலூன், கேக் மற்றும் பரிசுப் பொருள்களை வாங்கிக் கொடுத்து முகாமில் உள்ள நபர்களோடு பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இதையும் படிங்க: காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் - வானிலை ஆய்வு மையம்