கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியில் சில சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டங்களை விட்டு பொழுதுபோக்கி வருகின்றனர்.
இதில் ஒரு சிலர் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டங்களைப் பறக்க விட்டுள்ளனர். அப்போது மாஞ்சா நூல் ஒன்று அறுத்து கொண்டு தாம்பரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் கையை அறுத்துள்ளது. இதையடுத்து காவலருக்கு முதலுதவி செய்து இதுகுறித்து தாம்பரம் காவல்நிலையத்திற்கு மாஞ்சா நூலை பயன்படுத்தி ஒரு சிலர் பட்டம் விடுவதாக தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து தாம்பரம் காவல்துறையினர் தாம்பரம் பகுதியில் பட்டம் விடுபவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினரை பார்த்தவுடன் பட்டம் விட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து மாஞ்சா நூல் பயன்படுத்தி விடப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட பட்டங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் விட்டவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தாம்பரம் பகுதியில் சிலர் மாஞ்சா நூலில் பட்டம் விட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஊரடங்கு மீறல்: 7 லட்சத்து 44 ஆயிரம் பேர் கைது!