சென்னை ஐ.சி.எஃப். அம்பேத்கார் நகர் குடிசை மாற்றுவாரியம் குடியிருப்பைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் கருணா என்ற கருணாகரன் (35). கஞ்சா, குடிபோதைக்கு அடிமையான இவர் மீது ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு, கொலை முயற்சி, பல்வேறு அடிதடி, வழிப்பறி, திருட்டு என 11 வழக்குகள் உள்ளன.
இவர் நேற்று (ஆக. 25) அதே பகுதியில் உள்ளர் உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் சென்றபோது கஞ்சா போட்டு போதையில் மேளம் அடிக்கும் நபரிடம் தகராறு செய்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கருணாவை அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வெளியே அழைத்துள்ளனர்.
வெளியே வந்த கருணாவை திடீரென அரிவாளால் தாக்கியதோடு, அங்கிருந்த பெரிய கல்லை அவரின் முகத்தின் மீது போட்டுவிட்டு, இறந்துவிட்டதாக நினைத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் கருணாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஐ.சி.எஃப். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேளம் அடித்த இளைஞர்கள் கருணாவை கொலைசெய்தது தெரியவந்தது.
மேலும் கொலைசெய்த இளைஞர்கள் புழல் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், விரைந்துசென்ற காவல் துறையினர், விஜய் (எ) சாலமன் (20), அசோக் (20), கல்லூரி மாணவர் ராஜேஷ் (19),அலெக்ஸ் (20) ஆகியோரைக் கைதுசெய்தனர்.
மேலும் இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஹரி ஈஸ்வரன் என்பவரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ரவுடி தலைமறைவு: தண்டோரா மூலம் காவல் துறை எச்சரிக்கை!