சென்னை அடுத்த தாம்பரம் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளது பிரபல ரோலக்ஸ் பேக்கரி. இங்கு மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் ராகி பிஸ்கட் வாங்கி உள்ளார். அவர் பிஸ்கட்டை பிரிக்கும் போது, பிஸ்கட் முழுவதும் புழுக்கள் இருந்துள்ளன. இதனைக் கண்டு கணேசன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
பேக்கரிக்கு திரும்பிய அவர் அங்குள்ள பிஸ்கட்களையும் சோதனைசெய்தபோது அதிலும் புழுக்கள் இருந்துள்ளன. இதையடுத்து, பேக்கரி மீது தாம்பரம் நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர், ரோலக்ஸ் பேக்கரியில் மேற்கொண்ட சோதனையில் ராகி பிஸ்கட் பாக்கெட்யில் புழு மற்றும் பூச்சி இருப்பதை உறுதி செய்தார். மேலும் பிஸ்கட்டுகள் காலாவதியானது என்பதையும் கண்டறிந்தார்.
ராகி பிஸ்கட்களை கைப்பற்றி கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தாம்பரத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் பரிமாறப்பட்ட உணவில் புழு இருப்பதை அறியாமல் சாப்பிட்ட ஒருவர் பாதிப்புக்குள்ளானார். இதனால், தாம்பரத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முறையாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.