பொறியியல் படிப்புகளில் பி.இ., பி.டெக்., பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்வதற்கான பணிகள், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 33 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 118 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி இருந்தனர். பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பிக்க கடைசி நாளான ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 834 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 378 மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.
மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்கு தேவையான வசதிகளை செய்திருந்தது. அவர்களில் சான்றிதழ்களை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 436 பேர் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள தகவலில், பொறியியல் படிப்பில் சேர உள்ள மாணவர்களின் கோரிக்கையை ஏற்று சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.