தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, 41 நிறுவனங்களுடன் 8,835 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
இந்த முதலீடுகளை உறுதி செய்யும் வகையில், முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்த, அனுமதி வழங்குதலைத் துரிதப்படுத்த முதலமைச்சர் தலைமையில் உயர் நிலை அதிகாரக்குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டமானது சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி. உதயகுமார், எம்.சி சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒற்றைச்சாளர முறையில் பெறப்பட்டு நிலுவையிலுள்ள அனுமதிகள் மற்றும் மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு குழுமத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பிற அனுமதிகளை துரிதப்படுத்துவதற்காக மாதத்தின் முதல்வாரம் இந்த குழு கூடி ஆலோசனை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அன்னை இன்ப்ரா நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை!