கரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில், மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது
வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும், கரோனா பரிசோதனை செய்ய வேண்டும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில், உள்நாட்டு வருகைப் பகுதியில் இ-பாஸ் பெறாமல் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்திலேயே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது.
இ-பாஸ் எடுக்காதவர்களுக்கு உதவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வசதியால் பெரும்பாலான பயணிகள் இ-பாஸ் எடுக்காமல் சென்னை வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டதாக சென்னை விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசின் http://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையதளத்தில் பயணிகள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கரோனா பயணியுடன் பறந்த ஏர் இந்தியா விமானம் - துபாய்க்குள் நுழைய 15 நாட்கள் தடை!