நீட் தேர்வினால் ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்ட உத்தரவை ரத்துசெய்யக் கோரி பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதில் ஒன்றிய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல்செய்துள்ள நிலையில், அந்த வழக்கை நிராகரிக்கக் கோரி திமுக, அதன் கூட்டணிக் கட்சியினரும், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவி நந்தினி ஆகியோரும் இடையீட்டு மனுக்களைத் தாக்கல்செய்துள்ளனர். தற்போது இதில் திராவிட விடுதலை கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணியும் இணைந்துள்ளார்.
வழக்கறிஞர் மூலமாக கொளத்தூர் மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ள மனுவில், மக்கள் நலன்சார்ந்த அரசுக்கும் மக்களுக்கும் இடையே தூதுவர் என்ற அடிப்படையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவிடம் நீட் தேர்வின் சாதக பாதகங்கள் குறித்த அனைத்துத் தரப்பிலும் மனுக்கள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்கூட நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பை இழந்து தற்கொலைக்கு ஆளாகியுள்ள சம்பவங்களை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவருகிறேன். மனுதாரர் கரு. நாகராஜன் கூறுவதுபோல சட்டத்தை மீறி குழு அமைக்கப்படவில்லை என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு ஜூலை 13ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.