மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன்,தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று(ஆகஸ்ட் 9) காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், "கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று ஊக்கத்தை அளித்துள்ளார்.
இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் முறையை தமிழ்நாடு சிறப்பாக செ்யதுவருகிறது. அந்த வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 35 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் ஆதாரம் இல்லாமல் எந்தச் செய்தியையும் பரப்ப வேண்டாம் என பலமுறை கூறியுள்ளோம்.
அனைத்து தகவல்களையும் வெளிப்படையாக தமிழ்நாடு அரசு வழங்கிவருகிறது. தமிழ்நாட்டில் கரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக பரப்பப்படும் செய்தி தவறானது. இந்திய மருத்துவர்கள் சங்கத்தினுடைய தமிழ்நாட்டின் தலைவர் இந்த செய்தியை மறுத்துள்ளார்.
வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் முன்களப்பணியாளர்களை வைத்து அரசியல் செய்வதை திமுக நிறுத்தவேண்டும். சென்னையில் தொடர்ந்து சோதனை செய்துவருகிறோம். உலகமே வியந்து பார்க்கும் வகையில் சென்னையில் தொற்று எண்ணிக்கையை குறைத்துள்ளோம். பாதிக்கப்படும் நபர்களின் விழுக்காடு 40லிருந்து 7ஆக குறைந்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 18 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒளிவு மறைவு இல்லாமல் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது. கரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்துகளை சிலர் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கேரளாவுக்கு உதவ தயார் - முதலமைச்சர் ட்வீட்