சென்னை மாநகராட்சிக்குள்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்து இணையதளம் மூலம் மாநகராட்சிக்கு தெரிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. சென்னை மாநகராட்சி பகுதியில் இறந்த 236 நபர்களின் மரணம், அதன் விவரங்கள் இதுவரை முறையாக தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மாநகராட்சி ஆணையருக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் இறப்பு விவரங்களை தினமும் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இறந்தவர்களின் எண்ணிக்கையில் உள்ள மர்மம் குறித்து ஆய்வு நடத்த சுகாதரத் துறை கூடுதல் இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மாநகராட்சியில் விசாரணை செய்தபோது சென்னையில் பிறப்பவர்கள், இறப்பவர்களின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு 21 நாள்கள் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பின்னர் தான் பதிவேற்றம் செய்வோம். அதனடிப்படையில் தான் சுகாதாரத் துறைக்கு முழு விவரங்கள் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கரோனா பாதிப்பாளர்கள் சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும் போதே இறந்துவிட்டால், அவர்களது, உடலை எந்தவிதமான பரிசோதனையும் செய்யாமல் உறவினர்களிடம் அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது. கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் வேறு நோயால் பாதிக்கப்பட்டு, 14 நாள்களுக்குள் இறந்துவிட்டாலும் அவரை கரோனாவால் இறந்தவர் என கூற வேண்டும்.
அது போன்ற நடவடிக்கையை கடைப்பிடிக்காமல் இறந்தவரின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை நீக்குவதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கையை கடந்த 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கரோனாவால் 500க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அது குறித்து விபரங்களை விரைவில் சுகாதரத் துறை வெளியிடும் என சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனை செய்தாலே 14 நாள்கள் தனிமை - சென்னை மாநகராட்சி