உலகில் இன்று எந்தப் பகுதியில் திரும்பினாலும் அனைவராலும் உச்சரிக்கப்படும் ஒரே சொல் கரோனா. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வொருவரையும், தனிமைப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
பல்வேறு பணிகளுக்கு இடையில் விறுவிறுப்பாக இருந்த மக்கள், ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர். இதனால் அதிகளவில் செல்போன் மற்றும் டிவியில் தங்கள் நேரத்தைச் செலவிடுவதாகத் தெரிகிறது. மேலும், பொது மக்கள் வெளியில் சென்று வந்தால் தங்களின் முகத்தைத் தொடக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. வாய், மூக்கு மட்டுமல்லாமல் கண்கள் மூலமும் கரோனா வைரஸ் பரவுமா என்பது குறித்து கண் மருத்துவர் மாலதி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி.
ஊரடங்கு உத்தரவினால் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படுமா? அப்படி ஏற்படின் பாதுகாக்க என்ன செய்யலாம்?
குழந்தைகள் வீட்டில் அதிக நேரம் டிவி மற்றும் மொபைல் போன் பார்ப்பதால் குழந்தைகளின் கண்களில் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே கண் பார்வைக்காகக் கண்ணாடி போட்டு உள்ளவர்களுக்கு பார்வை அதிகரிக்கும். சாதாரணமாக உள்ளவர்களுக்கும் பார்வை அதிகரிக்கக்கூடும். பார்வைக்கூடும்பொழுது, தூரத்தில் இருக்கும் பொருள்கள் தெரியாது.
கிட்டத்தில் உள்ள பொருள்கள் மட்டுமே தெரியும் என்பதையும், பிற்காலத்தில் கண்ணாடி போட வேண்டியதிருக்கும் என்பதையும் குழந்தைகளுக்குப் பெரியவர்கள் எடுத்துக்கூறலாம். இதனை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். மேலும் பெற்றோர்களும் வீட்டில் அதிக நேரம் டிவி பார்ப்பதையும், மொபைல் பார்ப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஊரடங்கு உத்தரவால் நாம் வெளியில் சென்று விளையாட முடியாத நிலையில், தூரத்திலுள்ள வானம் மரங்களை பார்க்கலாம். இதனால் கண்ணுக்கு அளிக்கப்படும் அழுத்தம் குறையும். அதிக நேரம் பார்ப்பதால் தலைவலி வருகிறது எனக் கூறுவார்கள். எனவே தொடர்ந்து டிவி, மொபைல் போன்றவற்றை பார்க்கக்கூடாது.
அதிக நேரம் ஒரு பொருளை அருகில் வைத்துப் பார்க்கும் பொழுது கண்ணுக்கு அழுத்தம் ஏற்படுவதுடன், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வரலாம். எனவே, கண்ணிற்கு அழுத்தம் இல்லாத வகையில் இடைவெளிவிட்டு பார்க்க வேண்டும். கண்ணிற்கு அழுத்தம் ஏற்பட்டால் பிற்காலத்தில் கண்ணில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பார்வையில் பிரச்சனை ஏற்படலாம்.
எனவே இடைவெளிவிட்டு படித்தல் ஒரு பொருளைப் பயன்படுத்துவது போன்றவற்றை மேற்கொண்டு கண்ணுக்கு அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டால் பிற்காலத்திலும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நலமுடன் இருக்க முடியும்.
கண்ணின் மூலம் கரோனா தொற்று பரவுமா?
கரோனா வைரஸ் தொற்று கண் பாதிப்பினை ஏற்படுத்தும். "மெட்ராஸ் ஐ" வந்தால் நோயாளிகளுக்கு கண்ணீல் இருப்பது போன்ற அறிகுறிகள் இவர்களுக்கும் இருக்கும். கண் சிகப்பாக இருத்தல், கண்ணிலிருந்து நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் தெரியும். நம்ம ஊரில் தற்போது மெட்ராஸ் ஐ வரக்கூடிய காலமாக உள்ளது. மெட்ராஸ் ஐ போன்று கரோனா வைரஸ் தொற்று பரவக்கூடியது தான்.
"மெட்ராஸ் ஐ" யில் கண்ணில் இருந்து வரக்கூடிய அழுக்கினை எடுத்து, வேறு ஒருவர் கண்ணில் வைத்தால் தொற்று ஏற்படும். அதேபோல் மெட்ராஸ் ஐ வந்தவரின் கண்ணீர் ஓரிடத்தில் விழுந்த பின்னர் அதனை எடுத்து வைத்தாலும் தொற்றுப் பரவும். இதேபோல் கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
குழந்தைகள் அதிகளவில் மொபைல் மூலம் பார்ப்பது, படிப்பது ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படுமா?
சமீபகாலமாகப் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கும் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் பார்த்து பணிபுரியும் வகையில்தான் உள்ளது. மேலும் பள்ளியிலிருந்து அளிக்கும் வீட்டுப் பாடங்கள் அனைத்தும் செல்போனில் தான் கொடுக்கின்றனர் என பெற்றோர்கள் கூறுகின்றனர்.
பிரிண்ட் எடுத்துப் படித்துக்கொள்ளலாம். தொடர்ந்து சிறிய மொபைல் போனில் பார்ப்பதில் இருந்து தவிர்க்கலாம். மேலும் புத்தகத்தை தொடர்ந்து 2 மணி நேரம் படிக்கும்போது கண்ணிற்கு அழுத்தம் வரத்தான் செய்யும். இதனைத் தவிர்ப்பதற்கு இயற்கை வெளிச்சத்தில் படிக்கலாம்.
இயற்கை வெளிச்சத்தில் படித்தால் கண்ணிற்கு அழுத்தம் ஏற்படாமல் இருப்பதுடன் பாதிப்பும் வராது. மேலும் படிக்கும் பொழுது இயற்கை வெளிச்சத்தில் நேராக அமர்ந்துப் படிக்க வேண்டும். படிக்கும் பொழுது இடைவெளிவிட்டு விட்டு படித்தால் கண்ணிற்கு எந்தவிதப் பாதிப்பும் வராது.
மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் எடுக்கும் வகுப்புகளினால் பாதிப்பு ஏற்படுமா?
ஆன்லைன், மொபைல் மூலம் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதால் கண்ணுக்கு அழுத்தம் வரத்தான் செய்யும். தற்பொழுது இதுபோன்ற கல்வி முறைதான் கற்றுத்தரப்படுகிறது. எனவே, அதை நாம் முழுவதும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால், அதே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர்ந்து அதில் கவனம் செலுத்தாமல் பிறப் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் முன்பு தொடர்ந்து எட்டு மணி நேரம் அமர்ந்திருந்தால் நிச்சயம் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். எனவே, நீங்களாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை இடைவெளிவிட்டு வேறு பொருளைப் பார்க்கலாம். அதன் பின்னர் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
கண்ணை நல்ல முறையில் பாதுகாக்க உண்ண வேண்டிய உணவு என்ன?
கண்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு கீரை, கேரட், பழங்கள் போன்ற வைட்டமின் அதிகமுள்ள உணவு முறைகளைச் சாப்பிட்டால் கண்ணை நலமுடன் வைத்துக் கொள்ளலாம். அதிகளவில் தின்பண்டங்கள் கொழுப்புச் சத்துள்ள பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!