சென்னையை அடுத்த நங்கநல்லூர் டிஎன்ஜிஓ, காலனி 7ஆவது தெருவில் இளம் பெண் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், நடந்து சென்ற பெண்ணிடம் வரம்பு மீறி அநாகரிகமான முறையில் நடந்துகொண்டுள்ளார். இதனால், அச்சமடைந்த பெண் கூச்சலிட, அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பிச் சென்றார்.
இந்நிலையில், மீண்டும் அதே பகுதியில் மற்றொரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதை கவனித்த அப்பகுதியினர், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பழவந்தாங்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகர் விரிவைச் சேர்ந்த சதீஷ்குமார்(30) என்பதும், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இவருக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆவதாகவும் கூறப்படுகிறது. நங்கநல்லூர், மடிப்பாக்கம் பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் நடந்து செல்லும் பெண்களின் பின்புறத்தைத் தட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் பல பெண்களிடம் இந்த முறையில் அநாகரீகமாக நடந்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, சதீஷ்குமாரை பழவந்தாங்கல் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுகவா மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள்