சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 16) அசோக் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகராஜன் பாதுகாப்பு, போக்குவரத்து ஒழுங்குப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள மரக்கிளை நாகராஜன் மீது விழுந்தது. இதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. மேலும் இரண்டு கார்கள் சேதமடைந்தன.
இதனையடுத்து, காயமடைந்த ஆய்வாளர் நாகராஜன் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் கொண்டுசென்றனர். அங்கு பிறநோயாளியாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக 10 நாள்கள் மருத்துவ விடுப்பில் ஆய்வாளர் நாகராஜன் தற்போது உள்ளார்.
இதனிடையே, இது தொடர்பான தகவல் அறிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று போனில் காவல் ஆய்வாளர் நாகராஜனைத் தொடர்புகொண்டு பேசினார். காயம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினார். தேவையான மருத்துவ உதவிகள் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், விரைவில் பூரண குணமடைந்து பணிக்குத் திரும்ப முதலமைச்சர் வாழ்த்துகள் தெரிவித்து, அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். பணியின்போது காயமடைந்த தன்னை முதலமைச்சர் அவர்கள் மனிதாபிமானத்துடன், அக்கறையாக விசாரித்து ஆறுதல் கூறியது தமக்கும், தமது குடும்பத்தினருக்கும் மிகுந்து மகிழ்ச்சி என்றும் தன் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்றும் ஆய்வாளர் நாகராஜன் கூறியதாகச் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிறையிலிருந்து வந்த கட்சி பிரமுகருக்கு பாலபிஷேகம் - வைரல் காணொலி