சென்னை: பாராலிம்பிக், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள், பட்டங்களை வென்ற 15 தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மொத்தம் ரூ. 3.98 கோடியை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.10) வழங்கினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடைபெற்று முடிந்த பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.2 கோடி வழங்கப்பட்டது.
ரூ. 3.98 கோடி ஊக்கத்தொகை
2020ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் (FIDE) மூலம் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டியில், இந்திய அணியின் சார்பாக கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், வி.ஆர். அரவிந்த் சிதம்பரம், ஆர். பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது. அவர்களது பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ. 12 லட்சம் ஊக்கத் தொகையாக கொடுக்கப்பட்டது.
![பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13285075_2.jpg)
மேலும் 2020ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வி.எஸ். ரத்தன்வேல் மற்றும் மு. பிரனேஷ், 2021ஆம் ஆண்டில் சதுரங்க விளையாட்டில் மகளிர் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற பா. சவிதா ஸ்ரீ ஆகியோருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்பட்டது.
![பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13285075_1.jpg)
மொத்தம் 3 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.