சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் 1500 மான்கள் உள்ளன. இந்த மான்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு வனத் துறை நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் இந்த மான்களை பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் தடைவிதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இங்கிருக்கும் மான்களை பிடித்து கிண்டி தேசிய பூங்காவுக்கும், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலத்திற்கும் மாற்றப்பட்டதில், 10 மான்கள் இறந்துவிட்டதாகவும் மேலும் தற்போது 70 மான்களை மேற்குத் தொடர்ச்சி மலையில் விட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல் மான்களை இடமாற்றம் செய்வது தவறு என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள், மனுவிற்கு அக்டோபர் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் உத்தரவிட்டனர்.