சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீபா (22). இவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வந்தார்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதன் காரணமாக, பெரம்பூரில் தங்கியுள்ள வீட்டுக்குச் செல்லாமல் கடந்த 16 ஆம் தேதி முதல் ஹாஸ்டலில் தங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை பிரதீபா தங்கியிருந்த அறை நீண்ட நேரமாக திறக்காததால், அருகிலிருந்த மாணவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது அறையின் உள்ளே மயங்கிய நிலையில் பிரதீபா கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பிரதீபாவை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல் வசந்தாமணி, மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு ஆகியோர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து காவல் துறை உயர் அலுவலர்களும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறுகையில், “இளங்கலை மருத்துவப் படிப்பு பயிலும் மாணவி பிரதீபா, ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியிலிருந்து உள்அறை மருத்துவப் பயிற்சி மாணவராகப் பணிக்கு வந்துள்ளார்.
அவர் 13 நாட்கள் மட்டுமே பயிற்சி மருத்துவராக பணிபுரிந்துள்ளார். கடந்த ஐந்து நாட்களாக இலங்கை மருத்துவ மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
மேலும் அவர் மகப்பேறு மருத்துவப் பிரிவில் பயிற்சி பெற்று வந்தார். அங்கு யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை. இருந்தபோதிலும் அவரது மாதிரிகள் எடுத்து சோதனை செய்தததில், அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது” என்றார்.
இதையும் படிங்க...சென்னையில் மருத்துவ மாணவி உயிரிழப்பு