சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, மெரினா கடற்கரையில் வியாபாரம் மேற்கொள்ள 900 ஸ்மார்ட் கடைகள் குலுக்கல் மூலம் சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட உள்ளது. மெரினா கடற்கரையில் ஏற்கனவே, வியாபாரம் நடத்தி சென்னை மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டவர்கள் வகை “அ” என்ற அடிப்படையில், 900கடைகளில் 60 விழுக்காடு கடைகள் என 540 கடைகளும், ஏனைய கடை நடத்தவிருப்பமுள்ளவர்கள் வகை “ஆ” என்ற அடிப்படையில் 40 விழுக்காடு கடைகள் என 360 கடைகளும் ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
“அ” வகையில் ஆயிரத்து 351விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு 1,348 விண்ணப்பங்களும், “ஆ” வகையில் 14 ஆயிரத்து 827 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு 12 ஆயிரத்து 974 விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் அண்ணாநகர்மண்டலம், ஷெனாய் நகர் அம்மா அரங்கில் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என ஆணையர் பிரகாஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சாலை மறியல்
அதன்படி, நேற்று காலை குலுக்கல் முறை தொடங்கப்பட்டுள்ள நிலையில், குலுக்கல் முறை நிறுத்த வேண்டும் எனக் கடை உரிமையாளர்கள் மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லத்தின் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடைபாதையில் அமர வைத்தனர். இந்நிலையில், காலை 12 மணியளவில் இந்த குலுக்கல் முறை செனாய் நகரில் தெடங்கியது. சிக்கிம் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதிஷ் கே.அக்னி கோத்ரி முன்னிலையில் இந்த குலுக்கல் முறை நடைபெற்றது.
குலுக்கல் முறை புறக்கணிப்பு
இந்தக் குழுக்கல் முறையை அனைத்து வியாபாரிகளும் புறக்கணித்தனர். இருப்பினும் நீதிமன்ற உத்தரவின்படி, குலுக்கல் முறை நடைபெற்றது. இதற்கிடையில், மெரினாவில் சாலை மறியலில் ஈடுபட்ட கடை உரிமையாளரின் பிரதிநிதிகள் நீதியரசர் சதிஷ் கே.அக்னி கோத்ரியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பின்னார் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கூறுகையில், "இந்தக் குழுக்கல் முறையை நாங்கள் புறக்கணித்து விட்டோம். எங்களுக்கு தேவையான ஆயிரத்து 940 கடைகளை மாநகராட்சி ஒதுக்க வேண்டும். மெரினா கடற்கரையில் மொத்தம் எட்டு சங்கங்கள் உள்ளன. எந்தச் சங்கத்தையும் மாநகராட்சி அணுகவில்லை. அவர்கள் வைத்துள்ள பட்டியலும் தவறானது. எட்டு சங்கத் தலைவர்களையும் கலந்து ஆலோசிக்காமல் அவர்களே பட்டியலை தயாரித்துள்ளனர்.
ஆயிரத்து 940 கடைகளுக்கும் அடையாள அட்டை கொடுத்துள்ளனர். ஆனால், எங்களையும் அணுகாமல் அவர்களே ஒரு பட்டியல் தயாரித்துள்ளனர். இதனால் நாங்கள் இதைப் புறக்கணித்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், "நாங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் குலுக்கல் முறையில் நடத்தி வருகிறோம். இன்று குலுக்கல் முறையில் கடைகள் தேர்ந்தெடுக்கப்படும். நாளை அந்த 900 கடைகள் எவ்வாறு வடிவமைப்பு மற்றும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை முன்னோட்டமாக நீதியரசர் முன்னர் காட்ட இருக்கிறோம்.
கடைகள் தேர்வு
இந்த குலுக்கல் முறைக்கு யாரையும் புறக்கணிக்கவில்லை. இந்தக் குழுக்கல் முறை இந்த இடத்தில் தான் நடக்கும் என்பதை ஏற்கனவே அனைவருடன் தெரிவித்துள்ளோம். உண்மைத் தன்மையுடன் அனைத்து வேலைகளும் நடைபெறுகிறது. அனைத்துவிதமான விவரங்களையும் காணொலியாகவும், புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளோம்.
இந்தக் குழுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகள் மட்டுமே இறுதியான கடைகள். அதனால், தான் நீதிபதி முன்பு குலுக்கல் முறை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். அனைவருக்கும் அனைத்து கடைகளில் கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம் என கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் வெளியிலிருந்து வருபவர்கள் கடை வைத்தால் நிறைய பிரச்சனைகள் வரும். எனவே எங்கள் கடைகளை எங்களிடமே தருமாறு கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மெரினாவில் கடைகள் ஒதுக்கீடு செய்த வழக்கு - சென்னை மாநகராட்சி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு