சேலத்தைச் சேர்ந்த ராஜு என்பவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமைப் பொறியாளருக்கு எதிரான ஊழல் புகார் ஒன்றினை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளார்.
அந்த மனுவில், "2008ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாளராகச் சேர்ந்து, அதே துறையில் கள உதவியாளராக பதவி உயர்வு பெற்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவருகிறேன்.
திருச்சி மாவட்ட தலைமைப் பொறியாளராகப் பணியாற்றிய வளர்மதி அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக, கைவிடப்பட்ட நிலங்களை அபகரித்து பினாமி பெயரில் ஆக்கிரமிப்பு செய்துவருகிறார்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட தானே, வர்தா, கஜா புயல் பாதிப்பின்போது திருச்சி, அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மின்தடம் சீரமைப்புப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
மின்தடம் சீரமைப்புப் பணிக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய கோடிக்கணக்கான ரூபாயில் ஒப்பந்த ஊழியருக்கு தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று நிர்ணயித்து அதற்கும் குறைவாகவே ஊதியம் வழங்கப்பட்டது. மேலும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வதில் மூன்றில் ஒரு பங்கு தரகுத் தொகையாக பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இதற்குத் தலைமைப் பொறியாளரா் வளர்மதியின் மகன் விக்னேஷ் ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டிருந்தார். தவறுகளைத் தட்டிக் கேட்கும் அலுவலர்கள் பணியிடை நீக்கம், பணியிடமாறுதல் செய்யப்பட்டுவருகின்றனர். அதனால் இந்த வழக்கை தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால் நேர்மையாக இருக்காது.
எனவே, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். எனது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் இந்த வழக்கின் விசாரணை குறித்து நான்கு வாரத்தில் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசை கண்டித்து மின் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!