நேற்றைய தினம் (ஜன.05 ) தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கன மழை பெய்த நிலையில் இன்று காலை முதல் மழை இல்லாமல் லேசான வெயில் இருந்தது. மதியம் 12.15 மணி அளவில் சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ( Easterly Waves ) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 07 மற்றும் 08 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 09ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
ஜனவரி 10ஆம் தேதியன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு (சென்டிமீட்டரில்)
கேளம்பாக்கம் (செங்கல்பட்டு ) 21,அண்ணா யூனிவர்சிட்டி (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 16 , எம்ஜிஆர் நகர் (சென்னை) 15, சோழிங்கநல்லூர் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை) தலா 14, செம்பரபக்கம் (திருவள்ளூர்), பூவிருந்தவல்லி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), தரமணி (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை) தலா 13, பெரம்பூர் (சென்னை) 12, ஆலந்தூர் (சென்னை), அம்பத்தூர் (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்) தலா 11, பூவிருந்தவல்லி ( திருவள்ளூர்), அண்ணா யூனிவர்சிட்டி (சென்னை) தலா 10, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை) தலா 9, திருவள்ளூர் ( திருவள்ளூர் ), ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டி (செங்கல்பட்டு) தலா 8, திருப்போரூர் (செங்கல்பட்டு), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) தலா 7, திருவாலங்காடு (திருவள்ளூர்), வைப்பர் (தூத்துக்குடி), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை ஜனவரி இன்றும், நாளையும் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.