இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் நிலையிலான பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு முற்றிலுமாக கடைப்பிடிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒருமுறை ஆள்தேர்வு நடத்தும் போது, போதிய எண்ணிக்கையில் ஓபிசி வகுப்பினர் கிடைக்கவில்லை என்றால், நிரப்பப்படாத இடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அடுத்த ஆள்தேர்வில் சேர்த்து நிரப்ப வேண்டும். ஆனால், ஒருமுறை கூட ஓ.என்.ஜி.சி அவ்வாறு செய்யவில்லை. மாறாக, பின்னடைவுப் பணியிடங்களைக் கணக்கில் காட்டாமல், ஏமாற்றி வந்திருக்கிறது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் இந்தச் செயலை உறுதி செய்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், கடந்த 14ஆம் தேதி நடத்தவிருந்த விசாரணையை ஓ.என்.ஜி.சி அலுவலர்கள் தவிர்த்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் கிரீமிலேயர் என்ற சமூக அநீதி ஆயுதத்தைப் பயன்படுத்தி திறமையானவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை ஓபிசி மக்கள் முழுமையாகப் பெறவேண்டுமெனில், கிரீமிலேயர் முறை நீக்கப்பட வேண்டும். அதை வலியுறுத்தி சமூக நீதி அமைப்புகள் போராட வேண்டும்.
இப்போது ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் செயல் மட்டுமே வெளியாகியுள்ளது. அனைத்து துறைகளிலும் ஓபிசிக்கள் எந்த அளவு வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிய, மத்திய அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனப்பணிகளின் ஒவ்வொரு நிலையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அவை 27 விழுக்காட்டைவிட எந்த அளவு குறைவாக உள்ளனவோ, அவற்றை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து சிறப்பு ஆள்தேர்வு மூலம் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் கொண்டு, அந்த இடங்களை நிரப்ப மத்திய அரசு முன்வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.