சென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளர் எனத் தொடர்ந்து சசிகலா தன்னை பிரகடனப்படுத்தி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க, மாம்பலம் காவல்துறையினருக்கு அறிவுறுத்துமாறு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் டி.ஜெயக்குமார் கடந்த ஜன.6ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் காவல் நிலையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், சசிகலா மீது ஏமாற்றுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல்துறைக்கு அறிவுறுத்துமாறு அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், பொது செயலாளர் பதவி நீக்கப்பட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஒ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், கட்சிக்கு உரிமை கோரிய சசிகலாவின் மனு தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் தான்தான் என சசிகலா தொடர்ந்து தன்னை பிரகடனப்படுத்தி வருவது, ஒரு ஏமாற்றும் செயல் எனவும், நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அளித்த தீர்ப்பை சசிகலா மதிக்காமல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், சசிகலாவின் செயல் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று(ஜன.12) விசாரித்த சைதாப்பேட்டை 17ஆவது நீதித்துறை நடுவர் கிருஷ்ணன், அதிமுக சார்பில் மாம்பலம் காவல் நிலைத்தில் அளிக்கப்பட்ட புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை வருகிற 20ஆம் தேதி எழுத்துபூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாம்பலம் காவல்ஆய்வாளருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்கள் வெளிநாடு வாழ் தமிழர்கள்! - ஸ்டாலின் புகழாரம்