தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனமான சாஸ்த்ரா பல்கலைகழகம் தனது நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காக 31.37 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகிறது. அந்த நிலத்தை தனக்கே வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தது. அரசு ஒதுக்கும் நிலத்திற்கு ஈடாக 36.16 ஏக்கர் மாற்று இடத்தை தருவதாகவும், சந்தை மதிப்பின் அடிப்படையில் 31 ஏக்கருக்கான விலை நிர்ணயம் செய்து அரசுக்கு வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தது.
அரசு தரப்பில் பல்கலைகழகத்தின் கோரிக்கை நிராகரிப்பட்டதால், கடந்த 2017 ம் ஆண்டு கல்வி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதையடுத்து, மூன்றாவது நீதிபதியாக வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், அரசின் முடிவை உறுதி செய்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கல்வி நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கல்வி நிறுவனம் நிவாரணம் பெற இந்த உத்தரவு தடையாக இருக்காது என தெரிவித்தது.
தொடர்ந்து கல்வி நிறுவனம் தமிழக அரசிடம் மீண்டும் நிலத்தை ஒதுக்கக்கோரி கோரிக்கை வைத்தது. கோரிக்கையை பரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழு, திறந்தவெளி சிறைச்சாலை அமைய இருப்பதால் அந்த இடத்தை தர தேவையில்லை என அரசுக்கு அறிக்கை அளித்தது. குழுவின் அறிக்கையை ஏற்ற தமிழக அரசு, சாஸ்த்ரா பல்கலைகழகம் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கர் நிலத்தை 4 வாரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது.