பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி தலைமையில் பொதுச் செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பாரதியார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்மன், "தாமரை உதவி திட்டத்தின் மூலம் எம்எஸ்எம்இ சிறு, குறு நிறுவனங்களுக்கு உதவி செய்யப்படுகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம் ரூ. 20 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 20 லட்சம் கோடி இங்கிலாந்து நாட்டின் ஒரு வருட பட்ஜெட். அமெரிக்காவில் 25 விழுக்காடு ஜிடிபி ஆகும்.
ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் இருந்து நான்கு லட்சம் மாணவர்கள் உயர் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசுகள் பாதுகாவலனாக இருக்க வேண்டும். மத்திய அரசை முதலமைச்சர் குற்றஞ்சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது" என்றார்.