இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறைச் செயலாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்.
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில், 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி உத்தரவிட்டிருப்பதற்கும், உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் அடையாளமாகத் திகழும் தொழிலாளர்களின் உரிமைகள், பாதுகாப்புகள் ஆகியவற்றைப் பறிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசின் தொழிலாளர் நல அமைச்சகம், சம்பந்தம் இல்லாததைப் போல, வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கும், திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளின் உச்சக்கட்டமாக, தற்போது, தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் மூன்று வருடங்களுக்கு இடைக்கால நீக்கம் (சஸ்பென்ட்) செய்யப்படுகிறது என்று உத்தரப்பிரதேச அரசும், 8 மணி நேர வேலை 12 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது என்று மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில பாஜக அரசுகளும் அறிவித்திருப்பது, ஏழைத் தொழிலாளர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம், ஏமாற்றலாம். அவர்கள் உரிமைகளை யார் வேண்டுமானாலும் விருப்பம் போல் பறித்துக் கொள்ளலாம் என்ற ஆபத்தான உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.