சென்னை உயர்நீதிமன்றத்தில் காமராஜர் சாலை அன்னை சத்யா நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கத்தின் மனைவி பிரேமா வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அதில், "வழக்கு ஒன்றின் விசாரணைக்காக தனது கணவரை கடந்த 6ஆம் தேதி ஐஸ் ஹவுஸ் காவல் ஆய்வாளர் சரவணன் அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அவரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து 8ஆம் தேதி கிளை சிறையில் சென்று பார்த்தபோது தனது கணவரின் உடலில் காயங்கள் இருந்தது. அவரை ஆய்வாளர் சரவணன் விசாரணை என்று அடித்து சித்திரவதை செய்து இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி தனது கணவர் மரணம் அடைந்து விட்டதாகவும், பின்னர் இந்த வழக்கு சந்தேகத்திற்குரிய மரணம் என்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காவல் ஆய்வாளர் சரவணனின் தாக்குதலில்தான் தனது கணவர் மரணம் அடைந்துள்ளார்.
எனவே இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும், மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
காவல் ஆய்வாளர் சரவணனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட தனக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதி ரவீந்திரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு குறித்து டிசம்பர் 23ஆம் தேதி பதிலளிக்க தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: நில விவகாரத்தில் தலையிட திமுக எம்எல்ஏ-வுக்கு தடை!