சென்னை: புரசைவாக்கம் சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கொளத்தூர் பகுதியில் செல்ல பிராணிகளான பறவைகள், மீன்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணர் ஜெயந்தி பண்டிகையன்று பிரகாஷ் தனது கடையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றார். அப்போது, வீட்டு வாசலில் வைத்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி சாய்த்தனர். இந்த திடீர் தாக்குதலால் நிலைகுலைந்த பிரகாஷ் நான்கு இடங்களில் வெட்டு காயம்பட்டு சரிந்து விழுந்துள்ளார். வெட்டிய நபர்கள் தப்பிச் செல்லும் போது துரோகம் செய்கிறாயா எனக்கூறி அரிவாளை பொதுமக்கள் மத்தியில் சுழற்றியபடி தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வேப்பேரி காவல் துறையினர், பிரகாஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பிரகாஷ் வழக்கமாக தனது மாருதி சுவிப்ட் காரில் தான் செல்வார். நேற்று (செப்டம்பர் 7ஆம் தேதி) தெருவோரம் நின்ற காரின் முன்பக்க சக்கரத்தின் காற்று இறங்கிய காரணத்தால் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பும் போது தான், இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆகையால், கொலையாளிகளே திட்டம் தீட்டி காரின் சக்கரத்தில் காற்றி இறக்கி, பிளான் செய்து இந்த கொலையை செய்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
காவல் துறையினரின் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இந்த கொலை சம்பவமானது குரங்கு கடத்தல் கும்பலின் பின்னணியில் நடந்தது தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பிரகாஷ், தாய்லாந்து போன்ற பிற நாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் அரிய வகை உயிரினங்களை விற்பனை செய்து வந்திருக்கிறார். அதன்படி பாங்காங்கில் மதன் என்பவர் அரிய வகை உயிரினங்களை அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தும் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தாய்லாந்து, பப்புவா நியூகினியா போன்ற நாடுகளில் இருந்து அரிய உயிரினங்களை சட்டவிரோதமாக கடத்தி சென்னையில் விற்கும் இந்த கும்பலுடன் பிரகாஷும் ஈடுபட்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.