வானிலை, பருவநிலை, பெருங்கடல்கள், இயற்கைப் பேரிடர்கள் குறித்து தகவல்களை அளித்துவரும் மத்திய புவி அறிவியல் அமைச்சகம், இத்துறையில் சிறந்த பங்களிப்பு அளித்தவர்களுக்கு தேசிய விருதுகளை அறிவித்துள்ளது.
புவி முறை அறிவியலின் பல்வேறு துறைகளில் முக்கியமான அறிவியல் பங்களிப்பு அளித்துவரும் சிறந்த விஞ்ஞானிகள், பொறியாளர்கள் ஆகியோருக்கு அங்கீகாரம் அளிப்பதும், இந்தத் துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள பெண்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிப்பதும்தான் இந்த விருது வழங்குவதின் குறிக்கோளாகும்.
அதன்படி, சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் எம்.ஏ. ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆழ்கடல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மேலும், நிலவியல் துறையில் மிகச் சிறந்த பங்களிப்பு அளித்துவரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் வி.வி.எஸ்.எஸ். சர்மா, கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சி விஞ்ஞானி டாக்டர் சுரேஷ் பாபுவுக்கு, வளி மண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறையைச் சார்ந்த என்.வி. சலபதிராவுக்கு, நில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருதும், பெண் விஞ்ஞானிக்கான அன்னா மானி விருது, கோவா தேசிய பெருங்கடல் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் லிடியா டி.எஸ். கண்டேபார்கருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.