சென்னை : தமிழ்நாடு மீன்வளத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் அழகன்குப்பம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆலம்பரைக்குப்பம் ஆகிய கழிவேலி நீர்பிடிப்பு பகுதிகளில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்கக் கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரூ.235 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டது.
இதனையடுத்து, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரான என்.மணிவண்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுவில், துறைமுக கட்டுமான பணிக்காக விதிகளை மீறி திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
மேலும், கட்டுமான பணிகளுக்குத் தேவையான ஜல்லி கற்கள், கான்கிரீட் கலவை ஆகியவற்றை வாங்கும்போது ஈரோட்டை சேர்ந்த நிறுவனம் பலனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.22.46 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் வெளியிட்ட டெண்டரை ரத்து செய்து, விதிகளுக்கு உட்பட்டு புதிய டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தமிழ்நாடு மீன்வளத்துறை தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் தனக்கு டெண்டர் கிடைக்கவில்லை என்பதால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட டெண்டரை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், விதிகளுக்கு உட்பட்டு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தாகி ஆரம்பக் கட்ட பணிகளும் நடந்து வருவதால், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும், என அதில் கோரியுள்ளார்.
இதையும் படிங்க: 2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!