சென்னை தண்டையார்பேட்டை அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர், “சென்னையில் 4, 5 மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதால் சிறப்புக் குழு மூலம் நிறைய செயல்பாடுகள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும் வீடு வீடாகச் சென்று நடத்தும் ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அறிகுறி உள்ளவர்களை உடனடியாகக் கண்டறிந்து, உயிரிழப்புகள் தடுக்கப்படுகின்றன.
குறிப்பாக 140 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அறிகுறிகளுடன் வரும் மக்களுக்குச் சோதனைகள் நடத்தி கண்காணிக்கிறோம்.
குடிசைப்பகுதிகளில் கண்காணிப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. காரணம் கரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை இங்குதான் அதிகமாகப் பதிவாகி இருக்கிறது. அதிகப்படியான சோதனையால் பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து, அதனைக் கட்டுக்குள் கொண்டுவருவதே நோக்கம்.
அதுபோல அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளைப் பின்பற்றாத சலூன்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதனால் நான்கு மாதங்கள்வரை கடைகளுக்குச் சீல்வைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
மக்கள் அடர்த்தி அதிகமாக இருப்பதால் தண்டையார்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. 1286 தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 1000 பகுதிகள்வரை விடுவிக்கப்பட்டுள்ளன
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி, சமுதாயக் கூடங்களில் பாதிக்கப்படாத வயதான, வேறு உடல் பாதிப்புக்கு உள்ளானோரை தங்கவைத்து தனிமைப்படுத்த தொடங்கியுள்ளோம்.
இந்த மக்களுக்குச் சத்தான உணவு, மருந்துகள் வழங்கப்பட்டு 7-10 நாள்களுக்கு மீண்டும் வீட்டுக்கு அனுப்பப்படுவர். மேலும் சென்னையில் முகக்கவசம் அணியாததால் 60 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிலும் அபராதம் விதிப்பது மாநகராட்சி நோக்கம் அல்ல; ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கோயம்பேடு காய்கறிச்சந்தை திறப்பு என்பது நான்கு துறைகள் தொடர்புடையது. எனவே தற்போது அதைப் பற்றி கூற இயலாது” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு நிலங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை